காளையை அஞ்சி ஓடச் செய்யும்
கட்டிளங் காளையே!
கும்பலாகச் சென்று அதன்
கொம்பைத் திருகுவதிலா
ஆண்மை இருக்கிறது? ...இல்லவே!
ஐந்தறிவு ஜீவன் அதை
அடக்குவதில் என்ன இலாபம் ?ஆறறி வாளனே ! நின்
ஐம்புலங்களை அடக்கிப் பார்!
அற்புதங்கள் நிகழும்!
ஜல்லிக் கட்டு இல்லை எனில்
மறத் தமிழன் ஒன்றும்
மானம் கெட்டுப் போக மாட்டான்.
மாற்றம் மட்டுமே
மாறாத தன்மை யுடைத்து !
பழமை தவிர்; புதுமை சேர்;
காலத்தோடு பயணம் செய்!
மகத்தான சாதனை
மண்ணிலும் விண்ணிலும்
ஏன்.. உன்னிலும் படைத்து
உயர்வு கொள்! பிறரை
உய்விக்கச் செய் !
சிற்றின்ப மகிழ்விற்கு
சக்தியைச் சீரழிக்காது
உலகம் உய்விக்க
உனக்குள் பயணம் செய்!
எத்திக்கும் சென்று
நல்லவைக் கற்று / பெற்று
பொருள் ஈட்டு ! அருள் கூட்டு !
மருள் விரட்டு !
தமிழன் உயரும் போது
தமிழும் உயரும் !
தலை நிமிர்ந்துச் செல்
தன்னை வென்றவனே
இத்தரணி வென்றவன் !
எவ்வுயிர்க்கும் அன்பு செய் !
ஏழ்மை போக்க
இயன்றவரை உதவு!
மெய்யடியார் நட்பு கொள் !
மெய்யாய் வாழ் !
"ஆண்மை எனப்படுவது யாதெனின் ஐம்பொறி
அடக்கி வெலல் ஆம் " என
புதுக்குறள் சொல்!
புத்தாக்கச் சிந்தனையோடு
எழுவாய் நல் இலக்கணமாய் வாழி !

No comments:
Post a Comment